எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த 28ம் தேதி இரு கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடல் பகுதியில் ஏராளமான உயிரினங்கள் செத்து மிதக்கின்றன.
எண்ணெய் கழிவுகளை நீக்கும் பணிகளில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வாளிகளில் அள்ளி கழிவுகளை நீக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று எண்ணூர் பகுதிக்கு விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் சென்றார். அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் போன்று எண்ணெய் கழிவுகள் அகற்றப்படுகிறது. கப்பல் இடித்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. கழிவுகளை அகற்ற தேவையான உபகரணங்கள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. வாளீயை வைத்து அள்ளி சுத்தப்படுத்த இது என்ன கிணறா? இது போன்று செய்தால் என்றைக்கு இந்த பணி முடியும்? போராடினால்தான் தேவைகள் நிறைவேற்றப்படும் என்றால் இன்னொரு போராட்டத்துக்கும் தயார் என்று பேசினார்.