நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக, மக்கள் நல கூட்டணி-தமாகா உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது.
தேர்தலுக்கு முன்னர் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் இழுக கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டிருந்தது. ஆனால் தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்த் கட்சியின் நிலமை அதள பாதாளத்துக்கு சென்று விட்டது. கட்சியின் அங்கீகாரத்தையும், சின்னத்தையும் இழந்து பரதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது தேமுதிக.
கட்சியின் நிலமை இப்படி என்றால் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் நிலமை மேலும் சோகமாகியது. சொத்துக்களை விற்று தேர்தலில் செலவழித்த அவர்கள் தற்போது அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தோற்ற வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரையும் ஒவ்வொருவராக அழைத்து தோல்விக்கான காரணத்தை கேட்டு அறிந்தார் விஜயகாந்த்.
இந்த ஆலோசனையில் கட்சியினர் கூறிய முக்கிய குற்றச்சாட்டு தேர்தலில் வைத்த கூட்டணி தான் தோல்விக்கு காரணம். தனித்து போட்டியிட்டிருந்தால் கூட கட்சியின் வாக்கு வங்கியை கூட தக்கவைத்திருக்கலாம். மேலும் நடுநிலையாளர்களின் வாக்குகளை மேலும் வென்றிருக்கலாம் என்றனர்.
மேலும் சில வேட்பாளர்கள் தங்கள் சொத்துக்களை அடகு வைத்து தேர்தலை சந்தித்ததால் தற்போது மோசமான பொருளாதார சூழ்நிலையில் இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் தேர்தலில் தோல்வியுற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் தலா 10 லட்சம் செட்டில் செய்ய இருப்பதாக விஜயகாந்த் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து 103 வேட்பாளர்களுக்கும் 10 லட்சம் வீதம் 10 கோடியே 30 லட்சம் ரூபாய் செட்டில் செய்ய உள்ளார் விஜயகாந்த். விஜயகாந்த் பணத்தை செட்டில் செய்தால், இந்தியாவிலேயே தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சி வேட்பாளர்களுக்கு பணத்தை செட்டில் செய்த முதல் தலைவர் என்ற பெருமையை பெறுவார்.