Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

8 துண்டுகளாக வெட்டி இளைஞர் படுகொலை: தலையைக் காணவில்லை

8 துண்டுகளாக வெட்டி இளைஞர் படுகொலை: தலையைக் காணவில்லை
, வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (12:39 IST)
வெங்கல் அருகே உள்ள ஆர்.ஆர்.கண்டிகை, விளாம்பாக்கம் சாலை பூண்டி கால்வாய் அருகே முட்புதரில் துர்நாற்றத்துடன் சாக்கு மூட்டை கிடந்தது. அதில், ஒரு அடையாளம் தெரியாத இளைஞரின் உடல் 8 துண்டுகளாக வெட்டிப் போடப்பட்டிருந்தது.
 
இது குறித்து வெங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். உள்ளே 2 சாக்கு பைகளில் துண்டு துண்டாக இளைஞர் உடல் இருந்தது. ஒரு பையில் மார்பு, வயிற்று பகுதியும், மற்றொரு பையில் கை, கால்கள் தனித் தனியாகவும் இருந்தன.
 
ஆனால், தலையை காணவில்லை. உடல் மட்டும் 8 துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் உடல் துண்டுகள் மீது ஆசிட் ஊற்றி எரிக்கப்பட்டு இருந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சைபர் கிரைம் டி.எஸ்.பி. சிவலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
 
அப்போது உடல் கிடந்த இடம் அருகே 5 காலி ஆசிட் பாட்டில்களை கைப்பற்றினர். மேலும் அங்குள்ள முட்புதரில் ஷேர் ஆட்டோவில் கூடுதல் பயணிகள் ஏற்றுவதற்கு பயன்படுத்தும் இருக்கை பலகை ஒன்று கிடந்தது. அப்பகுதியில் ரத்தக் கறைகள் ஏதுவும் இல்லாததால் மர்ம கும்பல் அவரை வேறு இடத்தில் கடத்தி சென்று துண்டு, துண்டாக வெட்டி கொன்று இங்கு வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
 
மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. துண்டான உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததாலும், ஆசிட் ஊற்றப்பட்டதாலும் மோப்பநாய் மோப்பம் பிடிக்க முடியாமல் நின்றது. கொலையாளிகள் சென்ற திசை நோக்கி ஓடவில்லை.
 
கொலை கும்பல் இளைஞர் உடலை கடந்த 4 நாட்களுக்கு முன்பே இங்கு வீசி இருக்கலாம் என்று தெரிகிறது. ஆசிட் ஊற்றி எரிக்கப்பட்டதால் துர்நாற்றம் உடனடியாக வரவில்லை.
 
கொலையுண்டவரின் தலை சிக்காததால் அவரை அடையாளம் காண்பதிலும், கொலையாளிகள் குறித்தும் துப்பு கிடைப்பதிலும் போலீசாருக்கு சவாலாக உள்ளது.
 
பெரியபாளையம், திருவள்ளூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் யாரேனும் மாயமாகி உள்ளனரா? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள். கைப்பற்றப்பட்ட ஆசிட் பாட்டில்கள் எங்கு அதிகம் விற்பனையாகும் என்று முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
 
துண்டிக்கப்பட்ட உடல் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் உடல்கள் அரம் வைத்து அறுத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. டி.என்.ஏ. பரிசோதனைக்காக உடலை சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 
இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் வெங்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil