உசிலம்பட்டியில் வெடிகுண்டு?: பொதுமக்கள் பீதி, காவல்துறையினர் சோதனை
உசிலம்பட்டியில் வெடிகுண்டு?
உசிலம்பட்டி தாலுகா அலுவலத்திற்கு முன்பு வெடிகுண்டு கிடந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அலுவலத்திற்கு முன்னர், கருப்பு சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவில் ஒரு மர்ம பொருள் கிடந்தது.
இதைப் பார்த்த பொதுமக்கள் அது வெடிகுண்டாக இருக்கலாம் என்று நினைத்து உசிலம்பட்டி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து உசிலம்பட்டி காவல்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, அங்கு கிடந்த மர்ம பொருளை பாதுகாப்பாக எடுத்து, உசிலம்பட்டி அருகே சின்னசெம்மேட்டுப்பட்டி மலை அடிவாரத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு வெடிகுண்டு நிபுணர்களுடன், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு, அந்த மர்ம பொருளை ஆராய்ந்தனர்.
அந்த சோதனையில், ஒரு தேங்காயில் சிவப்பு நிற நூலைச் சுற்றி, அதன் மேல்புறத்தில் கருநிற டேப்பை சுற்றி ஒரு வெடிகுண்டுபோல் இது வடிவமைக்கப்பட்டிருந்தது.
அத்துடன், வெடிப்பதற்கான திரி இருப்பது போல் செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நூல், டேப் ஆகியவற்றை அகற்றி விட்டு, பின்னர் தேங்காயை இரண்டாக உடைத்து அதை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில், வெடிகுண்டைப்போல் ஒரு தேங்காயை வடிவமைத்து தாலுகா அலுவலத்திற்கு முன்னர் வைத்து பொதுமக்களையும், காவல்துறையினரையும் குழப்பிய மர்ம நபர் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.