Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

20 தமிழர்கள் கொலை - தமிழக அரசு இரட்டை வேடம்: வைகோ குற்றச்சாட்டு

20 தமிழர்கள் கொலை - தமிழக அரசு இரட்டை வேடம்: வைகோ குற்றச்சாட்டு
, புதன், 5 ஆகஸ்ட் 2015 (23:42 IST)
ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அன்று திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழைக் கூலித் தொழிலாளர்களான 20அப்பாவி தமிழர்களை ஆந்திர மாநிலக் காவல்துறையினர் பலவந்தமாகக் கடத்திச் சென்று திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில் வைத்து, கொடூரமாகச் சித்ரவதை செய்து படுகொலை செய்தனர்.
 
அந்த தமிழர்கள் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகவும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு காவல்துறையினரைத் தாக்கியதாகவும், அந்த மோதலில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அப்பட்டமான கட்டுக்கதையை ஆந்திர மாநில அரசு அவிழ்த்துவிட்டது.
 
மனித உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு, வழக்கறிஞர் ஹென்றி திபேன் தலைமையிலான மக்கள் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள், மனித உரிமைக் காவலரும், மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் சுரேஷ் தலைமையில் உண்மை கண்டறியும் குழுவினரை அனுப்பி 20தமிழர்களின் கோரப் படுகொலையின் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன.
 
இறந்தவர்களின் உடல்களைத் தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து உடல்களைப் புதைக்கக் கூடாது, உடனடியாக எரிக்க வேண்டும் என்று தமிழகக் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டி 14 பேர் உடல்களை எரிக்கச் செய்தனர். இயக்குநர் கௌதமனும், படவேடு கிராம மக்களும் காவல்துறையின் தாக்குதலையும் மீறிப் போராடியதால், 6 உடல்களை எரிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் ஆணையால் அந்த 6 உடல்களும் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
 
ஆனால், இன்றுவரை பிரேத பரிசோதனை அறிக்கை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. படுகொலைகள் நடந்து 119 நாட்கள் ஆகியும் முதல்வர் ஜெயலலிதா ஒரு வார்த்தை அனுதாபம் தெரிவிக்கவில்லை. 
 
பாலச்சந்திரன், சேகர், இளங்கோ ஆகிய மூன்று சாட்சிகள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு முன் சாட்சியம் அளித்ததால், குற்றவாளிகளைக் கண்டறிய மத்திய புலனாய்வுத்துறை சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது. அதனை எதிர்த்து ஆந்திர அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தற்காலிகத் தடை ஆணை பெற்றுள்ளது.
 
இதன் பின்னணியில், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசும் தன்னை ஒரு தரப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவும், 20 தமிழர்களின் படுகொலையில் நீதியை நிலைநாட்டவும் தமிழ முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை மதிமுக, மனித உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சந்திக்க முடிவு செய்தோம்.
 
இதனையடுத்து, முதலமைச்சர் ஜெயலிலதாவை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு ஜூலை 15ஆம் தேதி அன்று நான் கடிதம் அனுப்பினேன். 20 நாட்களுக்கு மேல் ஆகியும் எந்தப் பதிலும் இல்லை. நாங்கள் சந்திப்பதற்கு வாய்ப்புத் தரவில்லை.
 
இதே பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்திப்பதற்கு நான் நேரம் கேட்ட 24 மணி நேரத்தில் எனக்குப் பிரதமர் வாய்ப்பு கொடுத்தார். 20 தமிழர்கள் படுகொலையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் கூறினார்.
 
இந்தச் சூழ்நிலையில், படுகொலையான 20 தமிழர்களின் குடும்பத்தினரைச் சென்னைக்கு அழைத்துவந்து முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க வைக்க வருவாய் துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் அந்தக் குடும்பத்தினருக்கு ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்.
 
மேலும், எங்களுடன் சென்னைக்கு வராவிட்டால் உங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது என்று அச்சுறுத்தியும் கடந்த 3 நாட்களாக முயற்சித்தும் அவர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
 
இதனால், சித்தேரி மலையில் வசிக்கின்ற, படுகொலைக்கு உள்ளான பழங்குடியினரான 7 பேரின் குடும்பத்தினரை இன்று வலுக்கட்டாயமாகச் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். தாங்களாகத்தான் வந்தோம் என்றும், அரசு கட்டாயப்படுத்தவில்லை என்று கூறும்படியும், இல்லை எனில் பல இன்னல்களைச் சந்திக்க நேரும் என்றும் அச்சுறுத்தி உள்ளனர். அதிமுக அரசின் பாசிச நடவடிக்கைகளுக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, படுகொலையானவர்களின் குடும்பங்களை அச்சுறுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil