சசிகலாவிற்கு எதிராக குரல் கொடுத்து வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் வேல்முருகன்(43). இவர் தீவிர அதிமுக விசுவாசி ஆவார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ. சிறைக்கு சென்ற போது, போலீஸ் சீருடையில் உண்ணாவிரதம் இருந்தார். அதேபோல், ஜெ. விடுதலை செய்யப்பட்ட போது, சீருடையில் மொட்டை போட்டு சர்ச்சையில் சிக்கினார்.
ஜெ.வின் மறைவிற்கு பின், ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளராக மாறினார். ஆனால், ஓ.பி.எஸ்-ஐ ராஜினாம செய்ய செய்து, சசிகலா முதல்வராக முயன்ற போது, சசிகலா முதல்வரானால் சென்னையில் ஜெ.நினைவிடம் அருகே சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வேண் என அறிவித்து பரபரப்பை கிளப்பினார்.
தற்போது, சசிகலா அதரவு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆகியுள்ளதால், அவர் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. எனவே, சென்னை வர விரும்பிய அவர், உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி இரவு, வேல்முருகனை சஸ்பெண்ட் செய்து தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவிட்டார்.
மேலிட உத்தரவின் நெருக்கடியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.