கடற்காற்று உருவாவதில் தாமதம் ஏற்படுவதாலும், மேகங்கள் குறைந்து காணப்படுவதாலும், தமிழகத்தில் வெயில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தி தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்து வந்தது. அதேபோல், வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வந்தது. இருந்தாலும், தமிழகத்தின் பட இடஙகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சில இடங்களில் அனல் காற்றும் வீசுகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தற்போது மேற்கு திசையில் இருந்து தரைக்காற்று வீசுவதாலும், கடற்காற்று நிலப்பகுதிக்குள் நுழைவுதற்கு தாமதம் ஏற்படுவதாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் மேகங்கள் அதிக அளவில் உருவாகாமல் இருப்பதும் வெப்பத்தின் தாக்கத்துக்குக் காரணம். இன்னும் ஒரு சில நாள்களுக்கு தமிழகத்தில் இதே நிலை நீடிக்கும்.
அதேபோல், தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரள மாநிலத்தில் அதிக மழை பெய்யும் பட்சத்தில் அதன் எல்லையில் இருக்கும் தேனி, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
முக்கியமாக, தமிழகத்தின் பிற இடங்களில் வெப்பச் சலனத்தின் காரணமாக சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைத் தூரலுக்கு வாய்ப்புள்ளது” என்று அவர்கள் கூறினர்.