Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ள நிவாரண பணிகளில் அரசு அக்கறை காட்டவில்லை: விஜயகாந்த் குற்றச்சாட்டு

வெள்ள நிவாரண பணிகளில் அரசு அக்கறை காட்டவில்லை: விஜயகாந்த் குற்றச்சாட்டு
, வெள்ளி, 20 நவம்பர் 2015 (00:13 IST)
தமிழகத்தில், கனமழை மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையல் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில் மழை, வெள்ள சேதங்கள் தவிர்க்க இயலாதது என ஒரே பல்லவியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார். சுமார் 15 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு இதுபோன்று சொல்வது நியாயமா? என்பதை அவர்தான் கூறவேண்டும்.
 
தேர்தலை மனதில் கொண்டு, வாக்கு வங்கி அரசியல் செய்யும் விதமாகத்தான் அவரது செயல்பாடுகள் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால்தான் பாதிப்புகள் குறைந்துள்ளதென்று முதலமைச்சர் கூறுகிறார்.
 
ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த பிறகும் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதே. இவர் சொல்லுவதை யார் நம்புவார்கள்? ஒரே நாளில் கொட்டித்தீர்த்த மழை என்று சொல்லும் முதலமைச்சர் ஜெயலலிதா, மழைநீர் வெளியேறுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்?
 
திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர் பந்தல் என்னுமிடத்தில் கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கி, சாலைகளும், வீடுகளும் மூழ்கியுள்ளன. பலமுறை அப்பகுதி மக்கள் புகார் கூறியும், மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற கோரியும் வெளியேற்றவில்லை. தேமுதிக சார்பில் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தும், அதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.
 
ஆனால், நான் அப்பகுதியை பார்வையிட வருவதை அறிந்து, தற்போது மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றப்படுகிறது. மழை நிவாரண பணிகளில் அதிமுக அரசு காட்டும் அக்கறையின் லட்சணம் இதுதான்.
 
கடந்த அதிமுக ஆட்சியில் 2004ல் சுனாமி பேரழிவும், 2005ல் புயல், மழை, வெள்ளமும், 2011ல் தானே புயலால் மழை, வெள்ளமும், 2015ல் புயலால் மழை, வெள்ளமும் ஏற்பட்டு பேரழிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்று பலமுறை பேரழிவுகளை சந்தித்தும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பாடம் கற்றுக் கொள்ளவில்லையா?

ஒரிஸா மாநிலத்தை 1999ஆம் ஆண்டு புயல் தாக்கி, அந்த மாநிலமே உருக்குலைந்துபோனது அதில் கற்றுக்கொண்ட பாடத்தால், ஒரிஸா மாநிலம் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் பாய்லின் புயல் குறித்த அறிவிப்பு கிடைத்த உடனேயே சுமார் 11.5 லட்சம் குடும்பங்களை, அவர்கள் வளர்த்த கால்நடைகளுடன், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி உயிரிழப்பை தடுத்தது. பாய்லின் புயல் பேரழிவிலேயே 27 பேர்தான் உயிரிழந்தனர்.
 
ஆனால் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே வானிலை ஆராய்ச்சி மையம் தமிழகத்தில் இதுபோன்ற பேரழிவு ஏற்படுமென்று எச்சரிக்கை விடுத்தும், அதை சிறிதும் சட்டை செய்யாமலும், இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும், குளுகுளு கொடநாட்டிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா சென்றததுதான் இந்த பேரழிவிற்கு முக்கிய காரணமாகும்.
 
மேலும் 2012 ஆம் ஆண்டே, தலைமை கணக்கு அதிகாரி (சிஏஜி) தனது அறிக்கையில் மீண்டும் ஒருமுறை இதுபோன்ற பேரிடர் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளக்கூடிய தயார் நிலையில் தமிழ்நாடு இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைக்கு பிறகாவது கடந்த மூன்று ஆண்டுகளில் தேவையான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பேரழிவு தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இதுபோன்ற தவறுகளை யார் சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவருக்கு ஆமாம் சாமி போடுபவர்களை மட்டுமே பிடிக்கும்.
 
தமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி காலங்களில் சுய அரசியல் இலாபத்திற்கும், தேர்தல்கால வாக்கு வங்கியை மனதில்கொண்டும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதும், கட்டிடங்கள் கட்டப்படுவதும், நீர்வழிச்சாலைகள் அடைக்கப்படுவதும், வசிப்பதற்கு தகுதியில்லாத, தாழ்வான மற்றும் நீர்நிலை பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு வசிப்பிடங்களை அமைத்துக் கொடுப்பதுமென, இயற்கைக்கு எதிரான செயல்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்தேறி வந்ததற்கு இரண்டு ஆட்சிகளும் துணை போயுள்ளன. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குதான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
 
இதற்கு துணை போனவர்கள் மாடமாளிகையில் சுகபோகமாக வாழ்ந்து வருகிறார்கள். 2009ஆம் ஆண்டு ஆசிய நகரங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து கனடாவை சேர்ந்த திட்ட அலுவலர் ராஃப் ஸ்டோரி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பல்வேறு ஆய்வுகள் செய்து, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்ட அறிக்கையை இரண்டு ஆட்சிகளும் துச்சமாக நினைத்து கிடப்பில் போட்டுவிட்டன. அந்த அறிக்கையின் அடிப்படையில் செயல்பட்டிருந்தால்கூட இதுபோன்ற பேரழிவை தடுத்திருக்கலாம்.
 
இவர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும் முதலமைச்சர் அல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே முதலமைச்சர் என்பதை மறந்துவிட்டு, அவரது தொகுதியை மட்டும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதுபோல மழைநீர் காலில் படாமல், மழை சேதத்தை பார்வையிட்டு சென்ற ஒரே முதலமைச்சர் இவர்தான். மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களையும், பிற இடங்களையும் ஏன் பார்க்க மறுக்கிறார். அங்கே பாதிக்கப்பட்டவர்களெல்லாம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக தெரியவில்லையா?
 
எதிர்வரும் தேர்தலை மனதில் கொண்டு வாக்குகளுக்காக நிவாரணம் வழங்குவதை விட்டுவிட்டு, உண்மையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் நிவாரண உதவிகளையும், இழப்பீடுகளையும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil