சுவாதியின் படுகொலை எதிரொலியாக குற்றபின்னணியில் உள்ள பலர் கைது செய்யப்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள புழல் சிறை நிரம்பி வழிகிறது.
சுவாதியின் படுகொலை சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. இதனால் சென்னை மாநகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை காவல்துறை கண்காணிப்பாளர் குற்றப்பின்னணி மற்றும் கொலை வழக்கில் சம்பதப்பட்ட அனைவரையும் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் சிறப்பு தனிப்படைகள் மற்றும் குற்றப்பிரிவு ரவுடிகள் கண்காணிப்பு பிரிவினர் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் குற்றப்பின்னணியில் உள்ள 179 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 676 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1250 விசாரணை கைதிகளை மட்டும் அடைக்க ஏதுவாக இருக்கும் புழல் சிறையில் தற்போது சுமார் 2400 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் புழல் சிறையில் நிரம்பி வழிகிறது. மேலும் காவல்துறையினர் இனி கைது செய்யப்படும் கைதிகளை சிறையில் அடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.