திருப்பூர் அருகே கள்ளக் காதல் பிரச்சனையால் 3 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் ஆற்றில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட மாணவன் ஆதிகேசவனின் தாய் பத்மாவதிக்கும், குமரேசன் என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் திடீரென பத்மாவதி குமரேசனுடன் தொடர்பு வேண்டாம் என்று தனது கணவருடன் வாழ முடிவு செய்துள்ளார்.
பத்மாவதியின் இந்த முடிவல் ஆத்திரமடைந்த குமரேசன் சில தினங்களுக்கு முன் பத்மாவதிக்கு போன் செய்து நீ உன் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்தால் உன் மகனை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளான். ஆனால் பத்மாவதி தான் கணவனுடன் வாழ்வேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மாணவன் ஆதிகேசவனை குமரேசனும் அவனது நண்பர்களும் கடத்தி பவானி ஆற்றில் மூழ்கடித்து கொன்றுள்ளனர்.
பள்ளிக்கு சென்ற குழந்தை திரும்பி வராததால் பதற்றமடைந்த பத்மாவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சில தினங்களுக்கு முன் குமரேசன் விடுத்த மிரட்டலையும் தெரிவித்தார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் குமரேசன் தான் மாணவனை கடத்தி கொன்றது தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் ஆற்றில் மூழ்கிய மாணவனின் உடல் கரை ஒதுங்கியது. குமரேசன் மற்றும் அவனது நண்பர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கள்ளக் காதலால் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் உயிர் பலியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.