சென்னையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் தெருநாய்கள் பராமரிப்பு மையங்களை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த சில காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சிறுவர்கள், குழந்தைகளை கடிக்கும் நாய்கள், வாகனங்களை துரத்திச் சென்று விபத்துகளையும் ஏற்படுத்துவதால் தெருநாய்கள் எண்ணிக்கையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேசமயம் அரசின் நடவடிக்கைகளுக்கு நாய் பிரியர்களிடையே எதிர்ப்பு எழுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் ரேபிஸ் பாதிப்பு, ஆக்கிரமிப்பு குணம் கொண்ட நாய்களை பராமரிப்பு மையத்தில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை வேளச்சேரி மற்றும் மாதவரத்தில் 2 புதிய நாய் பராமரிப்பு மையங்களை ரூ7.67 கோடி செலவில் உருவாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த மையங்களில் 500க்கும் மேற்பட்ட நாய்களை பராமரிக்க முடியும் என கூறப்படுகிறது.
இந்த செய்தி வெளியாகியுள்ள நிலையில் நாய்களால் ஏற்படும் விபத்துகள், உயிர் பலிகள் குறைந்தால் போதும் என மக்கள் இதற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
Edit by Prasanth.K