சொந்த நாட்டு மக்களை இலவச அரிசிக்காக கையேந்த வைத்ததை எப்படி ஒரு அரசின் சாதனையாக இருக்க முடியும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் சீமான், சமீபத்தில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தவமணி பத்மநாபனை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“தமிழக மக்களை இலவச அரிசிக்கு கையேந்த வைத்ததை இந்த அரசு எப்படி சாதனை என்று சொல்கிறது?
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால் எந்த பலனும் இல்லை. வேலையே செய்யாமல் சம்பளம் கொடுக்கப்படுகிறது.
அந்த திட்டத்தால் இதுவரை எத்தனை ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன? எத்தனை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்று கேட்டால் எந்த பதிலும் இல்லை.
கிராமங்களில் விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை. ஆனால், அங்கே இந்த திட்டத்திற்கு ஏராளமானோர் செல்கிறார்கள். பொருளாதாரத்தை வளர்க்க திட்டமிடாத அரசு, சும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்கு பணம் தருகிறது. இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.