தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று சிறையில் அடைப்பது என்று பல வருடங்களாக நடந்து வரும் சம்பவங்களாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதே இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்றும், கடல் எல்லை குறித்த விழிப்புணர்வை மீனவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபி சைலேந்திர பாபு தன்னுடைய முயற்சியின் மூலம் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவில் அவர் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். இதன்படி அனைத்து மீனவர்களுக்கும் செயற்கைக்கோள் செல்போன் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், அந்த செல்போனின் வழிகாட்டுதலின்படி இந்திய கடல் எல்லையை தெரிந்து கொண்டு அந்த பகுதிக்குள் மட்டும் மீன் பிடித்து இலங்கை கடற்படையினர்களின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம் என்று சைலேந்திரபாபு திட்டமிட்டுள்ளார். அதுமட்டுமின்றி ரோபோ படகுகள் மூலம் கடலோர பகுதிகளை கண்காணிக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.