அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா திமுகவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின, இந்நிலைலையில் அவரை திமுகவில் சேர்ப்பதில் திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருச்சி சிவாவை அடித்து, பின்னர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் ஜெயலலிதா தன்னை பதவி விலக வற்புறுத்துவதாகவும், அடித்ததாகவும் கூறி அரசியல் அரங்கையே அதிர வைத்தார். இவருக்கு பின்புலமாக திமுக இருப்பதாக அதிமுகவினரால் குற்றம்சாட்டப்பட்டது.
இதனையடுத்து திமுகவில் சசிகலா புஷ்பா இணையப்போவதாகவும், அவருக்கு ஆதரவாக கனிமொழி இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. இதனையடுத்து சசிகலா புஷ்பாவை கட்சியில் சேர்க்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமி சம்மதம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், திருச்சி சிவாவை அடித்த சசிகலா புஷ்பாவை கட்சியில் சேர்த்தால் அது கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என திமுக தலைமைக்கு புகார்கள் வருவதாக கூறப்படுகிறது. அனிதா ராதாகிருஷ்ணன், ஜோயல் ஆகியோர் திமுக தலைமைக்கு இது குறித்து கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.