சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் கடந்த ஞாயிறன்று புழல் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களாக வைக்கப்பட்டுள்ளது.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால், பிரேத பரிசோதனை செய்யப்படும் போது, அரசு மருத்துவர்களோடு, தங்கள் சார்பில் ஒரு தனியார் மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்து அரசு டாக்டர்கள் 4 பேர் நியமிக்கப்பட்டனர்.
இரு நாட்களுக்கு முன்பு அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனியார் மருத்துவரை அனுமதிப்பது குறித்து இரு நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்ததால், இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பார் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, அந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது ராம்குமார் தரப்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். அதில்,
ராம்குமார் உயிருடன் வரபோவது இல்லை. ஆனால் அவனது மரணம் எப்படி நடந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும். இதற்காக அவரது தந்தை பரமசிவம் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். கைது செய்யப்பட்டபோது கழுத்தை அறுத்து ராம்குமாரை கொடுமைப்படுத்தினர். இதுபற்றி செங்கோட்டை போலீசில் அவர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் தினமும் ராம்குமார் கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவரை சித்ரவதை செய்த அதிகாரிகள் இப்போது தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். 220 வோல்ட் மின்சாரம் தாக்கி ராம்குமார் இறந்தார் என்பதை நம்பும்படி இல்லை. இ.எல்.சி.பி. (எர்த் லீக்கேஜ் சர்க்கியூட் பிரேக்கர்) கருவி பொருத்தப்பட்ட கட்டிடத்தில் 220 வோல்ட் மின்சாரம் தாக்கி யாரும் பலியாக மாட்டார்கள். இது பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தது. ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் குழுவில் டாக்டர் சம்பத்குமாரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும் என்று சங்கரசுப்பு வாதிட்டார்.
இதையடுத்து இன்று மாலை தீர்ப்பு வெளியாகும் என தெரிகிறது.