சுவாதி கொலை வழக்கில், ராம்குமார் கைது செய்யப்பட்ட பின் போலீசார் குற்றவியல் நடைமுறைகளை மீறியுள்ளனர் என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 24ஆம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் சுவாதி படுகொலை செய்த வழக்கை, நீதிமன்றம் தானாக முன் வந்து முனைப்பு காட்டியது. இரண்டு நாட்கள் அவகாசம் தருவதாகவும், அதற்கு பின்னும் போலீசார் மெத்தனமாக இருந்தால், நீதிமன்றமே விசாரணை நடத்த வேண்டிவரும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
அதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த வெள்ளிக்கிழமை ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். தற்கொலைக்கு முயன்ற அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் இன்று அதிகாலை சென்னை கொண்டுவரப்பட்டார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவரின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் இதுபற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு இன்று பல கேள்விகளை எழுப்பினர்.
ராம்குமார்தான் குற்றவாளி என்று எப்படி முடிவு செய்தீர்கள்?
நீதிமன்றத்துக்கு வழக்கு வரும் முன்பே, ராம்குமார் கழுத்து அறுத்துக் கொண்ட புகைப்படம், சிகிச்சை பெரும் புகைப்படம், அவர் வாக்குமூலம் அளிக்கும் வீடியோ ஆகியவை எப்படி வெளியானது?
இப்படி எல்லா விவரங்களும் வெளிவந்து கொண்டிருந்தால், உண்மையான விசாரணை எப்படி நடைபெறும்?
இந்த விவகாரத்தில் குற்றவியல் நடைமுறைகளை தமிழக போலீசார் அப்பட்டமாக மீறியுள்ளனர். இது எப்படி நடந்தது? என்று சராமரியாக கேள்விகள் எழுப்பினர். அதேபோல், சுவாதி வழக்கை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்காது என்றும் கருத்து தெரிவித்தனர்.