சென்னையில் கர்ப்பிணி பெண் ஒருவர் மீது காவலர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
காஞ்சிபுரம், செய்யாறை சேர்ந்த தமிழரசன், முத்தாம்பிகை தமபதியினர் சனிக்கிழமை சிகிச்சைக்காக கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். முத்தாம்பிகை கர்ப்பமாக உள்ளார். மேலும் அவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த போது முத்தாம்பிகையின் குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. குழந்தையை அமைதியாக இருக்குமாறு அருகிலிருந்த காவலர் கூறியுள்ளார். ஆனால் அந்த குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தது.
இதானால் ஆத்திரமடைந்த காவலர் குழந்தையிடம் சத்தமிட்டார். இதனால் தமிழரசன், முத்தாம்பிகை தம்பதியினருக்கும், காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த காவலர் கர்ப்பிணியாக இருந்த முத்தாம்பிகையை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முத்தாம்பிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஒரு பெண் என்றும் கர்ப்பிணி என்றும் பாராமல் காவலர் என்மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றார். அவர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தாம்பிகை வலியுறுத்தியுள்ளார்.