செங்கோட்டையன் என்ற ஓணான்: ராமதாஸ் அதிரடி!
செங்கோட்டையன் என்ற ஓணான்: ராமதாஸ் அதிரடி!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை யாருமே பார்க்கவில்லை என்று தான் தகவல் வந்துகொண்டிருந்தது. ஆனால் தற்போது அவரது மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால் அதிமுகவினர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரை நாங்கள் பார்த்தோம், எங்களோடு அவர் உரையாடினார் என பல கதைகளை கூறி வருகின்றனர்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது தான் அவருடன் பேசியது குறித்து பல கதைகளை கூறினார். அதனை தொடர்ந்து தமிழக கல்வி மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையனும் ஜெயலலிதாவை பார்த்ததாக கூறினார்.
அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சசிகலா ஆதரவு அமைச்சர் செங்கோட்டையன் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது கண்ணாடி வழியாக அவரை பார்த்ததாக கூறினார். தன்னை பார்த்த ஜெயலலிதா இரண்டு விரல்களை காண்பித்ததாக கூறினார்.
இதற்கு ஓபிஎஸ் அணியில் உள்ள பொன்னையன், கே.பி.முனுசாமி ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர். செங்கோட்டையன் பொய் பேசுகிறார். அவர் எங்களை போன்று சசிகலாவை தான் பார்க்க முடிந்தது. ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என ஓபிஎஸ் அணியினர் கூறினர்.
இந்நிலையில் செங்கோட்டையனின் இந்த கருத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டரில் விமர்சித்துள்ளார். அதில் சசிகலா என்ற வேலிக்கு செங்கோட்டையன் என்ற ஓணான் சாட்சி என கூறியுள்ளார்.