சமீபமாக திரைப்பட பாடலுக்குத் தடை, அறுபடை யாத்திரை என தமிழ்நாட்டில் பிஸியாக வலம் வருகிறது பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள், தேசிய கட்சிகள் தங்கள் கட்சியை பலப்படுத்துவது, தேர்தலுக்கு தயார் செய்வது என பரபரப்பாக இயங்கி வருகின்றன. அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மறுபக்கம் ஆளும் திமுகவும் கடும் போட்டியாக இருக்கும் என்பதால் இது இருமுனை போட்டியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய்யின் தவெக கட்சி தனிக் கூட்டணி அமைத்து மும்முனை போட்டியாக சூழலை மாற்றும் நிலையும் உள்ளது.
இந்நிலையில் சமீபமாக பவன் கல்யாணின் ஜன சேனாவின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளன. தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி, சந்திரசேகர் ராவின் தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணியில் ஆந்திராவில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து பவன் கல்யாண் ஆந்திர துணை முதல்வராக உள்ளார்.
சமீபமாக பவன் கல்யாண் தமிழக மக்கள் குறித்து பேசுவது அதிகரித்துள்ளது. முக்கியமாக கர்நாடகா - தமிழ்நாடு நதிநீர் விவாகரம் குறித்தும், தமிழக மக்கள் குறித்தும் அடிக்கடி பேசுகிறார். சமீபமாக சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்ற பாடலை எதிர்த்து ஜன சேனா வழக்குத் தொடர்ந்த நிலையில் அந்த பாடல் நீக்கப்பட்டது.
அதுபோல இந்தியா - பாகிஸ்தான் போரின்போது இந்திய ராணுவ வீரர்களின் நலனை வேண்டி முருகனின் அறுபடை வீடுகளுக்கும் ஜன சேனாவினர் யாத்திரை செல்வதாக பவன் கல்யாண் அறிவித்தார். பவன் கல்யாணின் இந்த தொடர் செயல்பாடுகள் அவர் தமிழக சட்டமன்ற தேர்தலை குறி வைப்பதாக ஒரு கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைபாட்டில் தவெக உள்ள நிலையில், அதற்கு எதிராக பாஜக - அதிமுக கூட்டணிக்கு ஜன சேனா தார்மீக ஆதரவை தமிழ்நாட்டில் அளிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K