மதுரை அருகே குடிபோதையில் மாமியாரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடிய மருமகனை காவல் துறை தேடி வருகிறது.
மதுரை அருகே கரும்பாலை பகுதியை சேர்ந்த ரபீக்ராஜாவுக்கும், ராணிமங்களத்தை சேர்ந்த மும்தாஜ் பேகத்துக்கும் திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
திருமணமானதில் இருந்தே ரபீக்ராஜா குடித்துவிட்டு வந்து மனைவியை கொடுமைப்படுத்துவது வழக்கம். இதனால் மும்தாஜ்பேகம் சண்டை போட்டுவிட்டு தன் வீட்டுக்கு போய் விடுவார். பின்னர் ரபீக்ராஜா உறவினர்களுடன் சென்று சமாதானப்படுத்தி தன் வீட்டுக்கு அழைத்து செல்வார்.
ஒரு கட்டத்தில் ரபீக்ராஜாவின் கொடுமை அதிகமானதால் மும்தாஜ் தன் குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஒன்பது மாதம் கழித்து ரபீக்ராஜா மாமியார் வீட்டுக்கு சென்று குடித்துவிட்டு தன் மனைவியை குடும்பம் நடத்த வர வேண்டும் என தகராறு செய்துள்ளார்.
அப்போது ரபீக்ராஜாவுக்கும் அவரது மாமியார் கமர்நிஷாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் ரபீக்ராஜா அருகில் இருந்த கல்லை தூக்கி மாமியாரின் தலையில் போட்டுள்ளார். இதனால் தலையில் பலத்தம் காயமடைந்த மாமியார் கமர்நிஷா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். இதனையடுத்து தலைமறைவாக உள்ள மருமகன் ரபீக்ராஜாவை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.