காவிரி விவகாரத்தில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் நடத்திய கண்டன பேரணியில் தீக்குளித்த விக்னேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவிரி விவகாரத்தில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து காவிரி உரிமை மீட்பு ஊர்வலம் என்ற பெயரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன பேரணி நடத்தினர்.
யாரும் எதிர்பாராத விதமாக பேரணியில் திடீரென்று இளைஞர் ஒருவர் தீக்குளித்தார். அவர், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த, திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலர், விக்னேஷ்குமார் என்பது தெரிய வந்தது.
உடனே கட்சியின் தொண்டர்கள் அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். பின்னர், காவல்துறையினர் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விக்னேஷ் தீக்குளித்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேடியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுப்பட வேண்டாம் என்று வருத்ததுடன் கேட்டுக்கொண்டார்.