கரூர் பேருந்து நிலையத்தில் திண்பண்டங்கள் விற்கும் கடை மற்றும் கரும்பு பால் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மாயனூரை அடுத்த மேலமுனையனூரை சார்ந்த ஈஸ்வரனும், கரூர் நகர் படிக்கட்டுத்துறையை சார்ந்த பிரசாந்த் என்ற இளைஞர்களும் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிளவில் ஈஸ்வரன் மது போதையில் தனது நண்பரான பிரசாந்திடம் வம்பு இழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு பின்பு அடிதடியாக மாறியுள்ளது. அப்போது அருகில் இருந்த கட்டையை எடுத்து பிரசாந்த் ஈஸ்வரனை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது மயக்கமடைந்த ஈஸ்வரன் கீழே விழுந்துவிட்டார். போதை தெளிந்தவுடன் எழுந்து சென்று விடுவார் என்று எண்ணி பிரசாந்த் சென்று விட்டார். மீண்டும் காலையில் பார்த்த போது எழுந்து நிற்காமல் படுத்திருந்தவரை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது தொடர்பாக நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக நேற்றைக்கு முதல் நாள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரன் இன்று அதிகாலை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இறந்து போன ஈஸ்வரனின் உறவினர்கள் உடலை மாயனூரை அடுத்த மேல முனையனூரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து வந்து இறுதி சடங்கு நடத்தி வந்துள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஈஸ்வரனை தாக்கிய அவரது நண்பர் பிரசாந்தை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.