சென்னை பார்டர் தோட்டம், மோகன்தாஸ் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 38). பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. 4 முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்று வந்துள்ளார். கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம், குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தவர், ஜாமீனில் விடுதலை அடைந்து வெளியில் வந்தார்.
நேற்று மாலை, சென்னை ஐஸ் அவுஸ் வி.ஆர்.கோவில் தெருவில் சாவு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அங்கு அவருடன் சிலர் அடி-தடி மோதலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சென்று சமாதானம் செய்தனர். பின்னர் உடல் அடக்கம், கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் நடந்தது. அங்கு மீண்டும் மோதல் வெடித்தது. ராஜாவை சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
பலத்த காயம் அடைந்த ராஜா, உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து, அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜா இறந்து விட்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் மைலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் விரைந்து சென்றனர். அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. ராஜாவை வெட்டி சாய்த்தது, அவரது நண்பர்கள் 4 பேர் என்று தெரிகிறது.
போதையில் வெறியாட்டம் போட்டு, ராஜாவை நண்பர் என்றும் பார்க்காமல் கொலை செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட ராஜாவுக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.