கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் அவரை சந்திக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால், யாரையும் மருத்துவமனை நிர்வாகம் சந்திக்க அனுமதிக்கவில்லை.
அரசியல் பிரபலங்கள், ராகுல் காந்தி, வெங்கய்யா நாய்டு, அமித்ஷா, வைகோ, முக.ஸ்டாலின், திருமாவளவன், பொன்.ராதாகிருஷ்ணன், முத்தரசன், வேல்முருகன், தா.பாண்டியன், சீமான், கேரள முதலவர் மற்றும் ஆளுநர், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் பச்சமுத்துவின் மகன் ரவி பச்சமுத்து, தென்னிந்திய திரைப்பட சங்க தலைவர் நாசர், நடிகர் சிவக்குமார், கார்த்தி, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியின் மகன் கார்த்திக், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கச் சென்று திரும்பி வந்தனர்.
இந்நிலையில், விரைவில் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க அப்பல்லோ வருவார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.