மதுரை மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் எத்தனை தோல்வி வந்தாலும், திமுக தொண்டர்கள் துவண்டுவிட மாட்டார்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நடந்தது. இந்நக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–
மதுரையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவ–மாணவிகள், மருத்துவர்கள், தொழில் அதிபர்கள் என்று பல்வேறு தரப்பினரிம் கருத்து கேட்கப்பட்டது.
அப்போதுதான் அதிமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரியவந்தது. திமுக ஆட்சி வேண்டும் என்று 80 சதவீதம் பேர் நினைக்கின்றனர். அடுத்த ஆண்டு இது கண்டிப்பாக 100 சதவீதமாக மாறும்.
திமுக பல வெற்றி, தோல்விகளைக் கண்டுள்ளது. எத்தனை தோல்வி வந்தாலும், திமுக தொண்டர்கள் துவண்டுவிட மாட்டார்கள். யாராலும் திமுக வை அழிக்க முடியாது.
திமுக வை போன்று வெற்றி பெற்ற கட்சியும் கிடையாது. திமுக வைப் போன்று தோல்வி அடைந்த கட்சியும் கிடையாது. வெற்றி பெறும்போது வெறிகொண்டு அலையக்கூடாது.
தோல்வியை கண்டு துவண்டுவிடக்கூடாது என்ற அண்ணாவின் கொள்கையை உறுதியோடு ஏற்றுக் கொண்டு திமுக தொண்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோற்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். உண்மையிலேயே தோற்றது நாம் அல்ல, தமிழக மக்கள் தான். தவறு செய்து விட்டதை தற்போதுதான் மக்கள் உணருகிறார்கள்.
தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்க வந்த வெளிநாட்டினர் தற்போது வேறு மாநிலங்களை தேர்வு செய்ய தொடங்கி விட்டனர்.
திமுக ஆட்சியின்போது 50 க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டன. இதன் மூலம் சுமார் 2½ லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். அதிமுக ஆட்சியில் எத்தனை தொழிற்சாலை தொடங்கப்பட்டன என்று ஓ.பன்னீர்செல்வத்தால் கூற முடியுமா? இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.