முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஜூலை 29-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது மேலூர் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.அழகிரி அந்த பகுதியில் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்.
அப்போது அந்த தொகுதியின் தேர்தல் அலுவலரும் வட்டாட்சியருமான காளிமுத்து அந்த சந்திப்பை விடியோகிராபர் மூலம் பதிவு செய்தார். இதனையடுத்து தேர்தல் அலுவலர் காளிமுத்து திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டுது.
கீழவளவு காவல் நிலையத்தில் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட 22 பேர் மீது மதுரை மேலூர் நீதிமன்ற நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அழகிரி உள்ளிட்ட 8 பேர் ஆஜராகாததால் வழக்கின் விசாரணை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து அன்றைய தினம் மு.க.அழகிரி உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.