காந்தி, நேதாஜி வரிசையில் ஜெயலலிதா: அமைச்சரின் அடடா கருத்து!
காந்தி, நேதாஜி வரிசையில் ஜெயலலிதா: அமைச்சரின் அடடா கருத்து!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளி என சில தினங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதாவின் படத்தை நீக்க கோரிக்கைகள் வருகின்றன.
மறைந்த முன்னாள் ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளி என உச்ச நீதிமன்றமே தனது தீர்ப்பின் மூலம் உறுதிபடுத்திய பின்னர் அவரது படங்களை அரசு அலுவலகங்களில் வைத்திருப்பது ஏன் என திமுக கேள்வி கேட்கிறது.
திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், உச்சநீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை அரசு அலுவலங்களிலுருந்து அகற்ற வேண்டும், அரசு விழாக்களில் பயன்படுத்தக்கூடாது.
அம்மா என ஜெயலலிதாவை குறிக்கும் பெயரில் அரசு திட்டங்களை அறிவிக்க கூடாது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெயர்களை மாற்ற வேண்டும், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அரசு செலவில் மண்டபம் எழுப்பக்கூடாது போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜெயலலிதாவின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக் கூடாது என்று சட்டமோ, நீதிமன்றங்களோ தடை செய்யவில்லை.
தங்களுடைய சட்டங்களை மீறியதற்காக மகாத்மா காந்தியையும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸையும் அன்றைய பிரிட்டிஷ் அரசு தண்டித்து சிறையில் அடைக்கவில்லையா? அவர்களுடைய புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் மாட்டாமல் இருக்கிறோமா என்ன? என ஒரே போடாக போட்டார் அவர்.
தேசத் தலைவர்களையும், தீர்ப்பில் ஊழல் குற்றவாளி என்று சொல்லப்பட்ட ஜெயலலிதாவையும் ஒப்பிட்டுப் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.