Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”இந்தி இலவசம்; தமிழுக்கு கட்டணமா?”: தென் ஆப்பிரிக்காவின் இந்திய தூதரகத்துக்கு வைகோ கண்டனம்

”இந்தி இலவசம்; தமிழுக்கு கட்டணமா?”: தென் ஆப்பிரிக்காவின் இந்திய தூதரகத்துக்கு வைகோ கண்டனம்
, புதன், 25 மார்ச் 2015 (13:22 IST)
தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய தூதரகம், இலவசமாக இந்தி மொழியை கற்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், தமிழ்மொழியைக் கற்பிக்க கட்டணம் வசூலிக்கிறது. இதற்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுள் 60 விழுக்காட்டினர் தமிழர்கள் ஆவர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து 150 ஆண்டுகளாக தமிழர்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். வெள்ளையர்களின் நிறவெறிக் கொடுமையை எதிர்த்து அண்ணல் காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் சத்யாகிரகப் போராட்டங்களை நடத்தியபோது தமிழ் மக்கள்தான் காந்தி அடிகளுக்குப் பெரும் துணையாக இருந்தனர்.
 
ஆனால், தென் ஆப்பிரிக்காவில் காந்தியார் நடத்திய சத்யாகிரகப் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நடைபெறுகின்ற நேரத்தில், தமிழர்களின் போராட்டம் இன்னமும் அங்கு தொடர்கிறது.
 
தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம், அங்குள்ள இந்தியர்களுக்கு இந்தி மொழியை இலவசமாகக் கற்றுத் தர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், 2008 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்மொழி இலவசமாகப் பயிற்றுவிக்கப்பட்டு வந்ததை நிறுத்திவிட்டு, இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.
 
இந்தியாவையும் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட தேசிய இனங்களின் தாய் மொழியையும் பண்பாட்டுக் கூறுகளையும் இந்தித்திணிப்பு மூலம் அழிக்கும் முயற்சியில் மோடி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
 
மேலும் அடுத்த பக்கம்.. 

2004ஆம் ஆண்டு தமிழுக்கு செம்மொழி சிறப்பை அளித்துள்ள இந்திய அரசு, தமிழ்மொழியை வளர்க்கவோ, உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை உருவாக்கி ஆராய்ச்சிப் பணிகள் பெருகிடவோ சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை. இந்நிலையில், மோடி அரசின் அதிகார மமதையின் காரணமாக, இந்திய அரசின் செலவில் தூதரகங்கள் மூலம் வெளிநாடுகளில் இந்தி மொழியை மட்டும் கற்றுத்தரத் திட்டமிட்டு இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.
webdunia
Vaiko condemn
இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தின் பன்முகத் தன்மைகளுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் பாஜக அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன என்பதற்கு தென் ஆப்பிரிக்காவில் இந்தித் திணிப்பும் ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
 
உலகில் தொன்மைச் சிறப்பும், இலக்கிய இலக்கண வளமையும் நிரம்பிய தமிழ்மொழியை அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் கற்றுத் தேர்ந்து தமிழ்மொழியின் சிறப்பைப் பேணிப் பாதுகாத்திட, தமிழ்நாட்டை ஆட்சி செய்த திமுக, அதிமுக, இரண்டு கட்சிகளுமே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனை தருகிறது.
 
தமிழக அரசின் அலட்சியத்தால், மத்திய அரசு தமிழ்மொழியின்பால் பாராமுகமாக இருப்பது மட்டும் அன்றி, தூதரகங்கள் மூலம் வலிந்து இந்தியைத் திணிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
தென் ஆப்பிரிக்காவில் இந்திய மொழி கற்பித்தலில் இருக்கும் பாரபட்சமான அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தென் ஆப்பிரிக்கத் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
 
அயல்நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் தமிழ்மொழியைக் கற்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil