மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த மசாஜ் சென்டர் உரிமையாளர் கைது செய்யப்பட்டார், அங்கிருந்து சிக்கிம் மற்றும் மணிப்பூரை சேர்ந்த 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னையின் பல்வேறு இடங்களில் பியூட்டி பார்லர் மற்றும் மசாஜ் சென்டர் பெயரில் சிலர் வெளிமாநில மற்றும் உள்ளூர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக சென்னை காவல்துறை ஆணையருக்குப் புகார் வந்தது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி, பாலியல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றை சோதனை செய்தபோது, அங்கு பாலியல் தொழில் நடந்து வருவது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அதன் உரிமையாளர் 38 வயதுடைய ஆனந்த் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட ஆனந்த், இளம்பெண்களை வைத்து பல ஆண்டுகளாக பியூட்டி பார்லர் நடத்தி வந்தார் என்றும், அதில், வருமானம் கிடைக்காததால் மசாஜ் சென்டர் ஆரம்பித்ததாகவும் தெரிய வந்தது.
ஆனால், அதிலும் எதிர்பார்த்த பணம் கிடைக்காததால் அதையே பாலியல் தொழில் சென்டராக மாற்றியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.
இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இந்தப் பெண்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் பேசிய சம்பளத்தையும் கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அங்கு சிக்கிம் மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த 4 இளம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.