மங்களூர் - சென்னை விரைவு ரயில் விருத்தாசலம் அருகே தடம்புரண்டு விபத்து: 40 க்கும் மேற்பட்டோர் காயம்.
மங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த மங்களூர் விரைவு ரயில் நள்ளிரவு 2.30 மணியளவில், கடலூர் விருத்தாச்சலம் அருகே பூவனூர் என்ற இடத்தில் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 40 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பின்னர் சென்னை நோக்கிவரும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பலர் நலமடைந்திருப்பதாகவும், அவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுள் 3 பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் இருப்பதாகவும், அவர்களுள் ஒருவருக்கு மட்டுமே கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.