தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான, மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பாணையை தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பாக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு ஒன்றினைத் தொடர்ந்திருந்தார்.
அதில், ‘நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டங்களில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு, பழங்குடியினருக்கான தொகுதிகள் ஒதுக்கீடு ஆகியவை முறையாக பின்பற்றப்படவில்லை என்பதால், அந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த புதன்கிழமை இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர் இரா.கிரிராஜன் ஆகியோர் ஆஜரானார்கள்.
அப்போது தேர்தல் தேதியை ஞாயிற்றுக்கிழமை அறிவித்து விட்டு, மறு நாளே வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் என அறிவித்ததால் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை ஆய்வு செய்யக்கூட கால அவகாசம் இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, உள்ளாட்சி மன்றத் தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே வேட்பு மனுத்தாக்கலை அறிவித்தது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம், அவசர கதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறி அறிவிப்பாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பழங்குடியினருக்கு ஒரு இடம்கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தனது உத்தரவில் சுட்டிக்காட்டி உள்ளார்.