Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லிங்கா வழக்கு: ரஜினிகாந்த் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

லிங்கா வழக்கு: ரஜினிகாந்த் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
, வியாழன், 29 ஜனவரி 2015 (15:22 IST)
லிங்கா படக்கதைக்கு இழப்பீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், ரஜினிகாந்த் உள்ளிட்ட லிங்கா படக்குழுவினர் ஆஜராக மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 
 
மதுரை சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்த மனுவில், “முல்லைப் பெரியாறு அணை மற்றும் அணையைக் கட்டிய பென்னிகுயிக் வரலாறை பின்னணியாக கொண்டு ‘முல்லைவனம் 999’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். அந்த கதையை திருடி ‘லிங்கா’ படத்தை தயாரித்துள்ளனர்.
 
எனவே, ‘லிங்கா’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எனது கதையை திருடிய ‘லிங்கா’ படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மனுதாரரின் முக்கியமான கோரிக்கை பதிப்புரிமை சட்டம் தொடர்பானது என்பதால் மனுதாரரின் கோரிக்கைக்கு இந்த நீதிமன்றம் பரிகாரம் அளிக்க முடியாது. மனுதாரர் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம்” என்று கூறியிருந்தார்.
 
அதன்படி, மதுரை மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில்  ரவிரத்தினம் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “லிங்கா படத்தின் கதை, நான் திரைக்கதை எழுதி தயாரித்து வரும் முல்லைவனம் 999 படத்தின் கதை ஆகும். எனவே, லிங்கா படத்தின் கதையும், முல்லைவனம் 999 கதையும் ஒன்று தான் என்று உத்தரவிட வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை லிங்கா படக்குழுவினர் அந்த படத்தின் கதையை தங்களுடையது என்று சொல்வதற்கு தடைவிதிக்க வேண்டும். என்னுடைய கதையை திருடியதற்காக இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சரண், லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் ஆஜராக நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil