சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூன் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இவ்வழக்கில் கர்நாடக அரசுத் தரப்பு மற்றும் சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு இறுதி வாதங்கள் முடிந்து விட்ட நிலையில், கர்நாடக அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா பதில் வாதத்தை நடத்தி வருகிறார்.
இந்த வாதத்தை விரைந்து முடிக்குமாறு நீதிபதிகள் கூறிய நிலையில், தனக்கு மேலும் 3 நாட்களாவது அவகாசம் வேண்டும்; குறைந்தது ஒரு முழுநாளாவது வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு, நீதிமன்றங்களுக்கான கோடை விடுமுறைக்கு முன்பு வியாழக்கிழமை ஒருநாள் தான் அவகாசம் இருக்கிறது என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை விடுமுறையிலும் தொடரலாமா? என்று கேள்வி எழுப்பினர்.
தனக்கு அவ்வளவு அவகாசம் தேவையில்லை என்ற ஆச்சார்யா, விடுமுறைக் கால நீதிமன்றத்தில் சிறிது நேரம் மட்டும் ஒதுக்கினால் போதும் என்றார். வியாழக்கிழமையன்று காலை, நீதிபதிகள் பினாகிசந்திரகோஷ், அமிதவ ராய் முன்னிலையில் பி.வி.ஆச்சார்யா தொடர்ந்து தமது தரப்பு பதில் வாதத்தை முன்வைத்தார்.
அதைத்தொடர்ந்து, விசாரணையை ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்த நீதிபதிகள், அன்று கர்நாடக அரசுத் தரப்பில் பி.வி.ஆச்சார்யா 2 மணி நேரமும், மற்றொரு வழக்குரைஞரான துஷ்யந்த் தவே 1 மணி நேரமும் வாதங்களை முன்வைக்கலாம் என்றும், அனைத்துத் தரப்பு வாதங்களும் அன்றைய தினமே முடித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கறாராக உத்தரவிட்டனர்.
இதனையடுத்து ஜூன் 1ஆம் தேதி வாதங்கள் முடிவடைந்தால், அன்றைய தினமே வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.