புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி நாராயணசாமி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
எம்.எல்.ஏ.வாக இல்லாத அவர் பதவி ஏற்ற 6 மாதத்திற்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது சட்டம். எனவே அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டது.
இந்நிலையில், நெல்லித்தோப்பு தொகுதியில், முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிடும் விதமாக, அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தன் பதவியை ராஜினாமா செய்ய போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அளித்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், நெல்லித்தோப்பு தொகுதி காலியாக இருப்பதாக முறைப்படி அரசிதழில் வெளியிடப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
இது குறித்து ஜான்குமார் கூறியதாவது, “எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய பல கோடி ரூபாய் வாங்கியதாக சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். நான் எதற்காகவும் பிறரிடம் பணம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
நான் பல கோடிகளை பார்த்தவன். நான் பணம் வாங்கிக்கொண்டு பதவியை ராஜினாமா செய்தேன் என்று நிரூபித்தால் அவர்களுக்கு எனது சொத்து முழுவதையும் எழுதி வைக்கிறேன். ராஜினாமா செய்ய நான் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.”என்றார்.