அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார், மக்களை பற்றி சிந்திப்பது இல்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய பிரபலமான இந்த வழக்கின் தீர்ப்பு தேர்தலுக்கு முன்பு வருமா? பின்னர் வருமா? என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஒமலூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மக்களை பற்றி சிந்திக்க ஜெயலலிதாவிற்கு நேரமில்லை. சொத்து குவிப்பு வழக்கை பற்றி சிந்திக்கவே ஜெயலலிதா நேரம் செலவழித்து வருகிறார் என கூறினார்.
மேலும் பேசிய அவர், இலவச மிக்சி, கிரைண்டர் கொடுத்து பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளார் ஜெயலலிதா. திமுக ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை தவிர்த்து உண்மையான ஆட்சி நடைபெறும் என அவர் கூறினார். அதிமுக தேர்தல் அறிக்கை வெளியாகாத நிலையில் அதில் இலவசம் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.