சிங்கம்புணரி அருகே ஜல்லிகட்டு தடையை மீறி காளைகள் அவிழ்த்து விடப்பட்டதில் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முருகப்பட்டியில் ஊர் கோவில் காளைகளுக்கு முறையாக அனுமதி பெற்று பொங்கல் வைத்தும், துண்டுகள் கட்டியும் மரியாதை செய்து கிராமத்தினர் காளைகளை வணங்கி சென்றனர்.
அதைத்தொடர்ந்து வேறு கிராமங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் வராதபடி பல இடங்களில் சோதனை சாவடி அமைத்து காவல் துறையினர் கண்காணித்து வந்தனர். இருப்பினும் அருகாமையில் உள்ள கிராமங்களில் இருந்து காட்டு வழியே வந்து குவிந்த 500க்கும் மேற்பட்ட காளைகளை சிலர் திடீரென்று அவிழ்த்து விட்டனர்.
அதனால் சிவகங்கை மாவட்ட காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் முருகப்பட்டியில் நடக்கும் மஞ்சு விரட்டு தேதியை இணையத்தில் பதிவிட்டதால் தென் மாவட்டங்கள் முழுவதிலும் இருந்து மாடுபிடி வீரர்கள் வந்து குவிந்தனர்.