தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் விலகுவதால், மக்கள் நலக் கூட்டனிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலின் போது விஜயகாந்த்தின் தேமுதிக, ஜி.கே.வாசனின் தமாகா ஆகிய கட்சிகள் மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து தேர்தலை சந்தித்தது.
ஆனால், அந்த கூட்டணியிலிருந்த அனைத்து கட்சிகளும், அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து தாமாகாவும், தேமுதிகவும் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலக முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணியிலிருந்து தமாகா விலகுவதாக ஜி.கே. வாசன் நேற்று அறிவித்தார். விஜயகாந்த் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த தொல்.திருமாவளவன் “தேமுதிகவும், தமாகாவும் மக்கள் நலக்கூட்டணியின் அங்கம் கிடையாது. மக்கள் நலக்கூட்டணியில் விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் கட்சிகள் மட்டுமே உள்ளன.
சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு மட்டுமே எங்கள் அணியோடு, தேமுதிகவும், தமாகாவும் செய்து கொண்டன. எனவே, உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் எப்படி போட்டியிட வேண்டும் என்று முடிவெடுப்பது அவர்களின் உரிமை.
தேமுதிகவும், தமாகாவும் விலகினால் மக்கள் நலக்கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பின்பற்றும் யுக்தியை அவர்கள் லோக்சபா தேர்தலிலும் பின்பற்றக்கூடாது என்பது எங்கள் விருப்பம்” என்று திருமாவளவன் கூறினார்.