நீதிமன்ற வளாகங்களில் உள்ள கழிவறைகளின் நிலை குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வேங்கை ஐ.பிரகாஷ்ராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செசன்சு உயர்நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் கழிவறை வசதிகள் சரியாக இல்லை. பல நீதிமன்ற வளாகங்களில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த பொதுமக்களை அனுமதிப்பதில்லை.
தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறைகளை திறக்கவும், அதை முறையாக பராமரிக்கவும், சுத்தம் செய்வதற்கு துப்புரவு தொழிலாளர்களை நியமிக்கவும், பொதுமக்கள் பயன்படுத்த வழிவகை செய்யவும் இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் கழிவறை வசதிகள் உள்ளதா, அதை சுத்தம் செய்யும் ஊழியர்கள் உள்ளனரா என்பது உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
அதேபோல் மாவட்ட செசன்சு நீதிமன்றங்கள் முதல் குற்றவியல் நீதிமன்றங்கள் வரை கழிவறை வசதிகள் எப்படி உள்ளது. எப்படி பராமரிக்கப்படுகிறது என்பதை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்ற நீதிபதி தலைமையில், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து முழுமையான அறிக்கையை இந்த நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்யவேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.