சென்னை உள்ள பெரும்பாலான கவுன்சிலர்கள் அரண்மனை போன்று வீடு வைத்து கொண்டு, வீட்டு வரி ரூ.55, ரூ.110 என சில்லரையில் வரி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இதைக்கேட்டு நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.
சென்னை ஈஞ்சம்பாக் கத்தை சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையினால், சென்னை மாநகரம் வெள்ளத்தால் சூழ்ந்து, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
நான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரி சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் ஆகியோரை அணூகி மனு கொடுத்தேன். ஆனால் அவர்கள், சென்னை மாநகராட்சிக்கு போதிய வருவாய் இல்லாததால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என்று பதில் அளித்தனர்.
இதையடுத்து நான் விசாரணை செய்ததில், மாநகராட்சிக்கு வருவாய் ஆதாரங்களே, கவுன்சிலர்களின் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது என்று தெரிய வந்தது. கவுன்சிலர்கள், அவர்களது சொத்துகளுக்கு அதிகாரிகளை நிர்பந்தம் செய்து குறைவான வரியை நிர்ணயம் செய்ய வைத்துள்ளார்.
கவுன்சிலர்களே இவ்வாறு நடந்துக்கொண்டால் மாநகராட்சிக்கு வருவாய் எப்படி வரும்? எனவே கவுன்சிலர்களின் சொத்துக்குகளுக்கு விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்து மீண்டும், உண்மையான வரியை நிர்ணடிக்கும்படி உத்திரவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் கவுன்சிலர் அண்ணா மலையின் 12 வீடுகளின் புகைப்படத்தையும், அவைகளுக்கு அவர் கட்டிய வரி விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.கிருபாகரண் முன்பு விசாரணைக்கு வந்தது. இதைப்பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-
2006 மற்றும் 2011 ஆண்டுகளில் வெற்றிப்பெற்ற கவுன்சிலர்கள், வேட்புமனுவுடன் சொத்து விவரங்களை தாக்கல் செய்து இருப்பார்கள். அந்த சொத்து விவரங்களை வருகிற வெள்ளிக்கிழமை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதோடு தற்போது உள்ள அவர்களது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.