கபாலி படத்தை, இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்கள் முடக்கப்படவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் வருகிற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், விரைவில் வெளியாகவுள்ள கபாலி படத்தை இணையதளத்தில் வெளியிட 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அதையும் மீறி இணையதளத்தில் கபாலி படம் வெளியானால், இந்த இணையதள சேவை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வந்தது. தீர்ப்பளித்த நீதிபதி, கபாலி திரைபபடத்தை சட்டவிரோதமாக வெளியிடும் இணையதளங்களை முடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதேபோல், கபாலி படத்தை பேருந்துகள், கேபிள் டி.வி.களில் ஒளிபரப்பவும் அவர் தடை விதித்தார்.
மேலும், மத்திய, மாநில அரசுகள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட அவர், இந்த வழக்கை ஆகஸ்ட் 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
கபாலி படம் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. மேலும், இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, சீனா, மலாய் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.