முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவது மனைவியின் குடும்பத்தினர் ஓய்வூதியம் கோர முடியது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியின் அருகில் உள்ள முதுவயல் கிராமத்தைச் சேர்ந்த வேலு. இவர் வனத்துறையின் கீழ் மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் பூங்காவில் தற்காலிக தோட்டக் காவலராக கடந்த 1973ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டுவரை பணியாற்றினார். பின்னர் நிரந்தரம் செய்யப்பட்டு வனக் காவலரானார். பின்னர் 2003ம் ஆண்டு உயிரிழந்தார்.
இந்நிலையில், பாக்கியம் அவர்களின் மனைவி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், ”என்னை திருமணம் செய்வதற்கு முன்னரே எனது கணவர் முனியம்மாள் என்பவரை திருமணம் செய்திருந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் முனியம்மாள் உயிருடன் இருக்கும்போதே 1978ஆம் ஆண்டு என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கான குடும்ப ஓய்வூதியத்தை எனக்கு வழங்க வேண்டும் என்று அலுவலர்களிடம் மனு அளித்தபோது இரண்டாவது திருமணம் என்பதால் ஓய்வூதியத்தில் உரிமைகோர முடியாது என்று கூறி என் மனுவை தலைமை கணக்காயர் நிராகரித்தார்.
அந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு குடும்ப பென்ஷன் வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவதாக ஒருவர் திருமணம் செய்தாலும் முதல் மனைவிக்கே குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை உள்ளது எனவே மனுவை நிராகரித்த அதிகாரியின் உத்தரவு சரியானது கூறியுள்ளார்.