ஜெ. மரணம் மர்மம்: இரண்டாவது கடிதம் எழுதினார் கௌதமி!
ஜெ. மரணம் மர்மம்: இரண்டாவது கடிதம் எழுதினார் கௌதமி!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர் பொதுமக்கள். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவே பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் சந்தேகத்துடன் தனது சந்தேகத்தையும் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கடிதம் எழுதினார் நடிகை கௌதமி. இதில் பிரதமர் தலையிட்டு நாட்டு மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என கூறியிருந்தார்.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் கௌதமிக்கு மிகுந்த ஆதரவு இருந்தது. இந்நிலையில் கௌதமி எழுதிய கடிதத்திற்கு பிரதமரிடம் இருந்து பதில் வராததால் இரண்டாவதாக ஒரு நினைவூட்டல் கடிதத்தை எழுதியுள்ளார் கௌதமி.
அதில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் மரணத்தில் இருக்கும மர்மம் தொடர்பாக நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இது சம்பந்தமாக பலரும் இப்போது கேள்வி எழுப்புகிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துள்ள தகவல்களை வரவேற்கிறேன். அதே நேரத்தில் நான் கேட்ட கேள்விகள் அது அல்ல. நோயாளிக்கும், டாக்டர்களுக்கும் இடையே பல ரகசியங்கள் இருக்கலாம். ஆனாலும், இது பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும்.
கோடிக்கணக்கான தமிழக மக்கள் கேட்க நினைக்கும் கேள்வியைத் தான் நான் கேட்கிறேன். இது பற்றி எனது கடிதத்தில் நான் தெளிவாக கூறி இருந்தேன். எனவே நான் எழுதிய கடிதத்திற்கு தங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இதை உங்களுக்கு நினைவூட்டல் கடிதமாக அனுப்புகிறேன் என்று கௌதமி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.