Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நமக்கு ஏற்படும் சோதனைகளை சாதனைகளாக்கி மக்களுக்கு தொண்டு செய்வோம்: விஜயகாந்த்

நமக்கு ஏற்படும் சோதனைகளை சாதனைகளாக்கி மக்களுக்கு தொண்டு செய்வோம்: விஜயகாந்த்
, திங்கள், 24 ஆகஸ்ட் 2015 (15:52 IST)
நமக்கு ஏற்படும் சோதனைகளை சாதனைகளாக்கி மக்களுக்கு தொண்டு செய்வோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை "வறுமை ஒழிப்பு தினமாக"  கடைபிடித்து வருகிறேன்.
 
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை "இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே" என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறார்கள்.
 
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று, அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தேமுதிக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள் ஆகும்.
 
இந்த ஆண்டு (2015) ஆகஸ்டு முதல் நவம்பர் வரை "மக்களுக்காக மக்கள் பணி" என்ற திட்டத்தின் மூலம் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டில் செய்ததைப் போல தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நல உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கவுள்ளேன்.
 
மேலும் கடந்த காலங்களில் முதியோர் இல்லங்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் 32 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளேன்.
 
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனை நிலங்கள் இலவசமாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச திருமண மண்டபமும், பெண் சிசுக் கொலையை தடுத்திட "பெண்கள் நாட்டின் கண்கள்" என்ற திட்டத்தின் மூலம் சுமார் 500 பெண் குழந்தைகளுக்கு அவர்களின் திருமண வயதில் தலா ரூபாய் இரண்டு லட்சம் கிடைக்கும் வகையில் 50 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாகவும், லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் தமிழகத்தில் 60 இடங்களில், 600 கணினிகள் கொண்ட இலவச கணினி பயிற்சி மையமும், ஏழைத் தாய்மார்கள் சுயதொழில் செய்வதற்காக 65 லட்சம் மதிப்பில் 1300 தையல் இயந்திரங்களும், ஏழை சகோதரிகளின் திருமணத்திற்கு உதவிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், காது கேட்கும் கருவிகளும், சலவைத் தொழிலாளர்களுக்கு சலவை பெட்டிகளும், மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணங்களும், பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடைகளும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கியுள்ளேன்.
 
இந்த உதவிகளை பெற்று படித்து, பட்டம் பெற்று பல்வேறு உயர் பதவிகளில் பலரும் இருக்கிறார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
 
மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டு தோறும் நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து நான் வழங்குவதைப் போல் இந்த ஆண்டும் வழங்கி உள்ளேன். தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளில் சுமார் 100 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு பயன்படும் வகையில் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு சக்கரம் பொருத்திய மோட்டார் சைக்கிள் வாகனங்களையும் வழங்கி உள்ளேன்.
 
தமிழகம் முழுவதும் வறுமை நிலையில் உள்ள...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்கவும்
webdunia
சுமார் ஆயிரம் (1000) நலிவுற்ற குடும்பங்களை தேர்வு செய்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் (10,000) ரூபாய் வீதம் சுமார் ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளேன். 
 
என்னால் இயன்ற மேற்கண்ட நல உதவிகளை நான் செய்வதைப் போலவே, தேமுதிக வின் அமைப்பு ரீதியான 59 மாவட்டங்களிலும் இது போன்று பல நல உதவிகளை கழக நிர்வாகிகளும், கழகத்தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்பு தினத்தில் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
லஞ்சத்தையும், ஊழலையும், வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் அரசியல் பாதையில் பயணித்து கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பல்வேறு இன்னல்களையும், வழக்குகளையும் சந்தித்து வருகின்ற நாம், நமக்கு ஏற்படும் சோதனைகளை சாதனைகளாக்கி மக்களுக்கு தொண்டு செய்வோம் என்று இந்த பிறந்த நாளில் உறுதி ஏற்போம். .
 
தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது, ஆனால் ஆட்சியாளர்களோ டாஸ்மாக் வருமானத்திற்காக அதை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் தீராத பல பிரச்சனைகள் உள்ளன. இவற்றையெல்லாம் எதிர் காலத்தில் தீர்க்க வேண்டிய முயற்சியில் தேமுதிக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். அதே நேரத்தில் வறுமையிலும், விலைவாசி உயர்விலும், வேலையில்லாத் திண்டாட்டத்திலும், சட்டம் – ஒழுங்கு பிரச்சனையிலும் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு உரிய தொண்டாற்றிடும் வகையில் பணியாற்றுவோம்.
 
ஒரு நல்ல எதிர்காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அமைய நானும், என்னை சேர்ந்த கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் எனது பிறந்த நாளில் சூளுரை மேற்கொள்வோம். தமிழ்நாட்டு அரசியலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளது.
 
அதற்காக தமிழக மக்களுக்கும், தாய் மார்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதே நேரத்தில் தமிழக மக்கள் தங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil