Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எட்டு வழிச்சாலை இதற்காகத்தான் - முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பகீர் தகவல்

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (12:13 IST)
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப்பகுதிளில் உள்ள ஏராளமான கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவே எட்டு வழிச்சாலை அமைக்கப்பட இருக்கிறது என சேலம் மாவட்ட வீரபாண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.செல்வம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

 
மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  
 
இந்த திட்டத்தினால் 1000 கிணறுகள், 100க்கும் மேற்பட்ட ஏரி, குளம் குட்டைகள் அழிக்கப்பட இருக்கிறது. மேலும், 20க்கும் மேற்பட்ட பள்ளிகள், கோவில்கள், 8 ஆயிரம் வீடுகள் இடிக்கப்பட இருக்கிறது. இந்த சாலைப் பணிக்காக 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் மற்றும் 500 ஏக்கர் வனப்பகுதியும் அழிக்கப்படவுள்ளது. 
 
அதோடு, சேலம் மாவட்டத்தில் உள்ள ஜருகுமலை, அருநூற்றுமலை, சேர்வராயன் மலை, சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன் மலை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்தேரி மலை, திருவண்ணாம்லை மாவட்டத்தில் உள்ள கவுத்திமலை, வேதிமலை என பல மலைகள் இரண்டாக உடைக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக இந்த மலைப்பகுதிகளில் வாழும் உயிரினங்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட இருக்கிறது.

 
இந்த திட்டத்தை எதிர்க்கும் அனைவரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட நடிகர் மன்சுர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது தமிழக அரசு. மேலும், இந்த திட்டத்தினால் தங்களின் விவசாய நிலங்களை பறிகொடுக்கவுள்ள விவசாயிகளையும் மிரட்டி, ஒடுக்கி வருகிறது தமிழக காவல்துறை. 
 
இந்நிலையில், அரியனூர் பகுதி மக்களுடன் சேர்ந்து இந்த திட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் வீரபாண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவான எஸ்.கே.செல்வம்  சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: 
 
இந்த திட்டத்தினால் பாதிக்கப்படவுள்ள அனைவரும் சிறு,குறு விவசாயிகள். அவர்களின் வாழ்வாதாரமே அந்த நிலங்களை நம்பியுள்ளது. இது அரசுக்கு புரியவில்லை. இந்த பகுதியில் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போகும் நிலத்திற்கு அரசு வெறும் 8 லட்சத்தை இழப்பீடாக கொடுப்போம் என்கிறது. அந்த பணத்தில் சேலம் மாவட்டத்தில் எந்த இடத்திலும் நிலம் வாங்க முடியாது என அவர் புகார் கூறியுள்ளார்.
 
மேலும், சென்னை - சேலத்துக்கு செல்லும் பயண நேரம் குறையும் என்பதெல்லாம கட்டுக்கதை. இதனால் வெறும் 30 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே குறையும். இதற்காகவெல்லாம் ரூ. 10 ஆயிரம் கோடியை தமிழக அரசு செலவு செய்யவில்லை. சேலம் மாவட்டம் கஞ்சமலையிலும், போதமலையிலும் ஏராளமான கனிம வளங்கள் இருக்கிறது. இதை மத்திய அரசும், எடப்பாடி பழனிச்சாமியும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து விட்டனர். அதேபோல், வடக்கு கல்வராயன், தெற்கு கல்வராயன், சேர்வராயன் மலைகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மலைகளில் கருங்கல் குவாரிகளை அமைத்து அங்குள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவே இந்த எட்டு வழிச்சாலை அமைக்கப்பட இருக்கிறது என அவர் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments