சட்டசபையில் நேற்று தொழில்துறை மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் துறை ஆகியவற்றின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி ராஜாவுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே ஆங்கிலத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் தமிழகத்தில் இருந்து தொழிற்சாலைகள் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டதாக டி.ஆர்.பி.ராஜா குற்றம் சாட்டினார், அப்போது அவர் ஆங்கிலத்தில் பேசினார், இதற்கு ஆங்கிலத்திலேயே பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா 'மை டியர் யங் மேன்' என ராஜாவை அழைத்தார் 'தமிழகத்தில் இருந்து எந்த தொழிற்சாலையும் வெளியே செல்லவில்லை. வரும் காலங்களில் இங்கே தொழில் தொடங்க, முதலீட்டாளர்கள் வரிசையில் நிற்பார்கள்' என்று ஆங்கிலத்தில் கூறினார்.
பின்னர் டி.ஆர்.பி.ராஜா பேசும் போது, நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை முதல்வர் புரிந்து கொள்வார் என்று உறுதியாக நம்புகிறேன். முன்னதாக பேசிய 2 அமைச்சர்கள் குறைந்தபட்ச ஆதார விலை பற்றி இங்கு பேசுகிறார்கள் என்றார்.
அவருக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, மை டியர் யங் மேன், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கு முழுமையாக தெரியும். தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் போய் விட்டதாக நீங்கள் சொன்னதற்கு நான் பதில் அளித்துள்ளேன் என்று ஆங்கிலத்திலேயே கூறினார்.
நன்றி: Jaya Tv
முதல்வரின் கருத்தில் நான் மாறுபடுகிறேன் என கூறிய டி.ஆர்.பி.ராஜா, தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டன என்ற சந்தேகங்கள் கிளம்பி உள்ளன என்று தான் நான் கூறினேன். அதற்கு என்ன அர்த்தம் என்றால், இந்த சந்தையில் இந்த சந்தேகங்கள் நிலவுகின்றன என்றுதான் கூறினேன். அது உங்களுக்கு சரியாக புரியவில்லை என்று நினைக்கிறேன். எனவேதான் அது பற்றி நான் விளக்கம் அளித்தேன் என்று கூறினார்.
அதற்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, மை டியர் யங் மேன், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கு மிகவும் நன்றாக தெரிகிறது. நீங்கள் வார்த்தை ஜாலத்தோடு விளையாடுகிறீர்கள். இந்த விளையாட்டெல்லாம் என்னிடம் நடக்காது என்றார்.