ஒட்டன்சத்திரத்தில் வாக்குப்பதிவின் போது திமுக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலில் திமுகவினர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனால் திமுகவினர் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திமுகவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கிட்டான், அவரது உறவினர் சரவணன் அவருடைய மனைவி ஜெயமனி ஆகியோர் வாக்களிக்க வந்தனர்.
அப்போது அவர்களை அதிமுக கவுன்சிலர் முருகன், அவருடைய மகன் விஜயகுமார் மற்றும் தம்பி ஈஸ்வரன் ஆகியோர் வாக்களிக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் திமுக, அதிமுகவினரிடம் மோதல் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் திமுக முன்னாள் கவுன்சிலர் கிட்டான் மற்றும் அவருடைய உறவினர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.