Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தலுக்காக ராஜபக்சே இரட்டை வேடம் போடுகிறார்: கருணாநிதி குற்றச்சாட்டு

தேர்தலுக்காக ராஜபக்சே இரட்டை வேடம் போடுகிறார்: கருணாநிதி குற்றச்சாட்டு
, வியாழன், 25 டிசம்பர் 2014 (19:46 IST)
போர்குற்ற விசாரணை நடத்த தயார் என்று தேர்தலுக்காக ராஜபக்சே இரட்டை வேடம் போடுவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் ஜனவரி 8ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 19 பேர் மனு செய்திருந்த போதிலும், 2 பேர் மட்டுமே பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ராஜபக்சேவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரி பால சிறிசேனாவை எதிர்க்கட்சிகள் நிறுத்தியிருக்கின்றன. ரனில் விக்கிரமசிங்கேயும், சந்திரிகாவும் இவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
 
இலங்கையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் இந்தியா நடுநிலை வகிக்க வேண்டியதற்கு மாறாக, ராஜபக்சே வெற்றி பெற வேண்டும் என்று நம்முடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, அந்தச் செய்தி இந்தியா முழுவதும் கண்டனத்திற்குரிய ஒன்றாக இருந்தது.
 
இந்தத் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிடும் சிறிசேனா, கடந்த மாதம் வரை ராஜபக்சே அரசில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர். இவருக்கு ராஜபக்சேவின் அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அவ்வாறு ஆதரவு தெரிவித்த அமைச்சர்களை ராஜபக்சே விலக்கிவிட்டார்.

மேலும் இலங்கையின் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இருந்து வந்த ரிஷத் பதியுதீனும், அவருடைய அனைத்து சிலோன் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான அமிர் அலி ஆகியோரும் சிறீசேனாவை ஆதரித்து பிரச்சாரம் செய்யப் போகிறார்களாம். 
 
இந்த நிலையில் இலங்கைத் தமிழர்கள் யாருக்கு வாக்களித்தால் தங்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும் என்ற எண்ணத்தில் உள்ளார்கள். தமிழர்களின் வாக்குகளைப் பெற ராஜபக்சே ஒரு சில புதிய வாக்குறுதிகளை வழங்க முன்வந்துள்ளார்.
 
இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப் போரின் போது ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் கொன்று குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஒரு புதிய வெளிப்படையான நீதி விசாரணை நடத்தப்படும் என்று ராஜபக்சே தங்களது தேர்தல் அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். போரின்போது எந்த உரிமைகளாவது மீறப்பட்டிருந்தால், அது குறித்த வெளிப்படையான உள்நாட்டு நீதித்துறை அமைப்பு மூலம் விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்படும் என்று ராஜபக்சே தெரிவித்திருக்கிறார்.
 
மேலும், தமிழர் பகுதிகளில் பிரச்சாரம் செய்யும்போது ராஜபக்சே கடந்த காலத்தவறுகளை மறந்து விடுங்கள் என்று கூறிய போதிலும், அவர் தமிழ் அமைப்புகளிடம் ஓட்டுக் கூட்டணி வைக்க முன்வரவில்லை. போட்டியிடும் 2 பேருமே, சிறுபான்மையான தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தால், பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற முடியாமல் போய்விடுமோ என்று எண்ணுகிறார்கள்.
 
வடகிழக்கில் தமிழர்களை மீண்டும் குடியேற்ற உதவி செய்வது போன்ற எந்தவொரு முடிவையும் இரு தரப்பினரும் அறிவிக்க முன் வரவில்லை. இதே ராஜபக்சே கடந்த காலத்தில் எல்.எல்.ஆர்.சி., அறிக்கையின் பரிந்துரைகளையும், 13வது சட்டத் திருத்தத்தையும் நிறைவேற்றி தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவேன் என்றார். இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நானும், டெசோ இயக்கமும் வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம்.
 
இதுகுறித்து, என்னுடைய கடிதத்தை நியூயார்க் நகரிலே உள்ள ஐ.நா. மன்றத்திலும், ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் திமுக பொருளாளர் ஸ்டாலினும், மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலுவும் நேரடியாகச் சென்று வழங்கினார்கள். தொடர்ந்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளைச் சார்ந்தவர்களும், இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களுக்கு சர்வதேச சுதந்திரமான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
 
ஆனால் ராஜபக்சே அதற்கெல்லாம் இணங்காமல், சர்வதேச விசாரணை என்ற ஒன்றே தேவையில்லை என்று அப்போது திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆனால் அதற்கெல்லாம் மாறாக தற்போது தேர்தல் என்றதும், தமிழர்களின் வாக்குகள் தேவை என்பதற்காக கடந்த கால போர்குற்றத் தவறுகளுக்கு விசாரணை நடத்தத் தயாராக இருப்பதாக கூறியிருப்பதில் இருந்து, அவர் எப்படிப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகிறார் என்பதை தெளிவாகத் தெரிந்துக்கொள்ள முடிகிறது.
 
கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வதைப் போல ராஜபக்சே தற்போது தன்னையே மாற்றிக் கொண்டு இரட்டை வேடம் போடுகிறார் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.
 
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil