ரூ. 50 லட்சம் கேட்டு என்ஜினீயர் கடத்தல் – சென்னையில் பரபரப்பு
ரூ. 50 லட்சம் கேட்டு என்ஜினீயர் கடத்தல் – சென்னையில் பரபரப்பு
கேளம்பாக்கத்தில் ரூ. 50 லட்சம் கேட்டு என்ஜினீயர் கடத்தப்பட்டுள்ளார்.
கேளம்பாக்கத்தை அடுத்த நாவலூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருபவர் பிரேம்குமார் (28) நேற்று அதிகாலை 2 மணி அளவில் பணி முடிந்து அலுவலகத்திலிருந்து வெளியே வந்த போது அந்த வழியே காரில் வந்தவர்களிடம் ‘லிப்ட்’ கேட்டு ஏறினார். சிறிது நேரத்தில் காரில் இருந்த 4 பேர் பிரேம்குமாரை மிரட்டி கடத்தி சென்றனர். அவரது பெற்றோருக்கு போன் செய்த கடத்தல் கும்பல் ‘உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம், ரூ.50 லட்சம் தரவேண்டும் இல்லையெனில் பிரேம் குமாரை கொன்று விடுவோம். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கக்கூடாது’ என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டனர். அதிர்ச்சி அடைந்த பிரேம் குமாரின் பெற்றோர் தாழம்பூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து, அனைத்து காவல்நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து உஷார் படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் பிரேம் குமாரின் பெற்றோரை மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் பணத்தை கேளம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு கொண்டு வரும்படி கூறினர். ஆனால் அவர்கள் அவ்வளவு பணம் இல்லை. ரூ. 1 லட்சம் மட்டும் உள்ளது என்றனர். உடனே கடத்தல் கும்பல் ரூ. 1 லட்சத்தை பிரேம் குமாருடன் அறையில் தங்கி இருந்த சந்தீப்பிடம் கொடுத்து அனுப்புமாறு கூறினர்.இதைத் தொடர்ந்து சந்தீப் வேடத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பணத்தை எடுத்து சென்றார். அவரை இடைவெளி விட்டு தனிப்படையினர் பின்தொடர்ந்து சென்றனர். ஆனால் கடத்தல் கும்பல் கேளம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு வராமல் மேலும் இரண்டு இடங்களுக்கு வருமாறு கூறி அலைக்கழித்தனர். கடைசியாக கிழக்கு கடற்கரை சாலை கோவளம் சாலை சந்திப்புக்கு வருமாறு கூறினார்கள்.
நள்ளிரவு 2 மணி அளவில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று, காரில் இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்கள் தையூர் பெரியமாநகரை சேர்ந்த பார்த்திபன், ஜெயசீலன் என்பது தெரிந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்படி தையூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரேம்குமாரை மீட்டனர். மேலும், 2 கடத்தல்காரர்கள், கேளம்பாக்கம் பிரவீண்பாலாஜி, அரக்கோணம் விவேக்ராஜ் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைதான 4 பேரும் பணத்துக்கு ஆசைப்பட்டு என்ஜினீயரை கடத்தியதாக தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.