Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈவிகேஎஸ் இளங்கோவன் - கார்த்தி சிதம்பரம் இடையே மோதல் வலுக்கிறது

ஈவிகேஎஸ் இளங்கோவன் - கார்த்தி சிதம்பரம் இடையே மோதல் வலுக்கிறது
, செவ்வாய், 27 ஜனவரி 2015 (18:09 IST)
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் இடையேயான மோதல் வலுத்து வருகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் அண்மையில் சென்னையில் தனது ஆதரவாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தியதோடு, ஜி67 என்ற அமைப்பையும் தொடங்கினார். அப்போது பேசிய அவர், காமராஜர் ஆட்சி மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்ததாக புகார் எழுந்தது.
 
இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மேலிடத்துக்கு புகார் அனுப்பினார். பின்னர் கூட்டம் நடத்தியது குறித்து வரும் 30ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியதோடு, விளக்கம் அளிக்காத பட்சத்தில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
 
இதனிடையே, தமாகா தலைவர் ஜி.கே.வாசனை, ப.சிதம்பரம் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இளங்கோவன், காங்கிரசை விட்டு யார் வெளியேறினாலும் கட்சி கவலைப்படாது என்று காட்டமாக கூறியிருந்தார்.
 
இந்த நிலையில், இளங்கோவன் அனுப்பிய நோட்டீசுக்கு கார்த்தி சிதம்பரம் இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், தன் மீது நடவடிக்கை எடுக்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை என்றும், காங்கிரஸ் மேலிடத்துக்குத்தான் அந்த உரிமை உள்ளது என்றும் கூறியுள்ளார்.
 
தான் பேசிய உரையை முழுமையாக கேட்காமல் இளங்கோவன் விளக்கம் கேட்கிறார் என்றும், கட்சியை விமர்சித்து பேசாதபோது நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதில் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil