சென்னையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் மீண்டும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாவதாக செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் நாளுக்கு நாள் நிலவரம் மிகவும் மோசமடைந்து வந்தது. இதனால் சென்னை உட்பட்ட கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு மட்டும் முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் சென்னையில் குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உருவாவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் மேற்கொள்ள உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ”சென்னையில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளையும் கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாத மார்க்கெட்டுகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது, அனைத்து மார்க்கெட் பகுதிகளிலும் சிசிடிவி கேமரா வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார். இரண்டாவது கட்ட கொரோனா தாக்குதல் சென்னையில் குறைவாக உள்ளதாக கூறியுள்ள அவர் இதுவரை இரண்டு பேர் மட்டுமே இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.